இரு கடை ஊழியர்கள் மோதல் திருமங்கலத்தில் சலசலப்பு
திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் இரு கடை ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதல், சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர் 2வது அவென்யூவில் துணிக்கடை இயங்கி வருகிறது. அந்த கடையின் முகப்பு நடைபாதையில், சில இளைஞர்கள் இணைந்து, பேக்கரி தின்பண்டங்கள் விற்கும் சிறிய உணவகம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, உணவகத்தில் சாப்பிட்ட சிலர், துணிக்கடையின் வெளியில் இருந்த அலங்கார பொம்மை ஆடையில் கைகளை துடைத்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட துணிக்கடை ஊழியர்களுக்கும், உணவகம் நடத்தி வந்த இளைஞர்கள் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. சம்பவம் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார், இருதரப்பினரிடம் பேச்சு நடத்தி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.