ஆய்வகத்தில் குடுவை வெடித்து இரு மாணவர்கள் படுகாயம்
சென்னை: அண்ணா பல்கலை ஆய்வுக்கூடத்தில், ரசாயன கண்ணாடி குடுவை வெடித்து சிதறியதில், இரு மாணவர்கள் படுகாயமடைந்தனர். அண்ணா பல்கலையில் பயிலும் எம்.டெக்., மற்றும் பி.டெக்., மாணவ - மாணவியர், செய்முறை தேர்வுக்கான பரிசோதனையில், ஆய்வகத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடுவையில் பிடிக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு ரசாயனம், திடீரென வெடித்து சிதறியது. இதில், கண்ணாடி துகள்கள் முகம், கைகளில் குத்தியும், ரசாயனம் கண்களில் பட்டதிலும், எம்.டெக்., மாணவர் நித்திஷ், 23, பி.டெக்., மாணவர் சூர்யா, 20, ஆகியோர் படுகாயமடைந்தனர். சக மாணவர்கள் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.