| ADDED : ஜன 02, 2026 05:34 AM
பேசின்பாலம்: பெண் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருந்த போதை வாலிபர் இறந்துவிட்டதால், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் நேற்று, பேசின்பாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் என்ற சிவகுமார், 40. திருமணம் ஆகாத இவர், தாய் குப்பு என்பவருடன் வசித்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர், கடந்த மாதம் 29ம் தேதி, கே.பி.பார்க் 14வது பிளாக் அருகே, மது போதையில் தாயிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அப்போது, அவ்வழியே சென்ற பெண் ஒருவர், தன்னைத் தான் சிவகுமார் தவறாக பேசுகிறார் என நினைத்து, கீழே கிடந்த கட்டையால் அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிவகுமார், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இச்சம்பவம் குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்யக்கோரி, பேசின்பாலம் காவல் நிலையம் முன், 40க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர்; சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.