| ADDED : ஜூலை 14, 2011 09:23 PM
கோவை : 'உடற்கல்வித்துறைக்கு என தனி கட்டடம், விளையாட்டு அரங்கம் மற்றும்
புதிய உடற்பயிற்சி கருவிகளை வாங்க, கல்லூரிகள் தீவிரமாக முயற்சிக்க
வேண்டும்' என, பல்கலை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாரதியார் பல்கலை
உடற்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களுக்கான
கூட்டம் நடந்தது. பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் முருகவேல்
வரவேற்றார். துணைவேந்தர் சுவாமிநாதன் தலைமை வகித்து பேசுகையில்,
''கல்லூரிகளில் உடற்கல்வித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
துறைக்கு என தனியாக கட்டடம், விளையாட்டு அரங்கம் மற்றும் புதிதாக
உடற்பயிற்சி கருவிகளை வாங்கும் வகையில், பல்வேறு திட்டங்களில் நிதியுதவி
பெற ஒவ்வொரு கல்லூரியும் முயற்சிக்க வேண்டும். பல்கலையில் அமைக்கப்பட்டு
வரும் விளையாட்டு உள் அரங்கம் பணி முடிவடைந்தவுடன், அனைவரின்
பயன்பாட்டுக்கு விடப்படும்,'' என்றார். கடந்தாண்டு தேசிய பல்கலைகளுக்கு
இடையிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற, நிர்மலா மகளிர் கல்லூரி மாணவி
ஹேமாஸ்ரீ- 100 மீ தடை ஓட்டம் (தங்கப்பதக்கம்), என்.ஜி.பி., கல்லூரி மாணவர்
சிவா- பளு தூக்குதல் (தங்கம்), ஆர்.வி.எஸ்., கல்லூரி மாணவர் மோகன்ராஜ் -
பளு தூக்குதல் (வெண்கலம்) மற்றும் இந்திய மகளிர் கைபந்து அணியில் பங்கேற்ற
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி ராகனா ஆகியோருக்கு
ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நடப்புக் கல்வியாண்டில் நடத்தவேண்டிய
போட்டிகள், இடம் மற்றும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இணைப்பேராசிரியர்
ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.