மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நந்தவனம் அருகே பவானி ஆற்றங்கரையில், கடந்த 3ம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் மான் இறைச்சி எடுத்து செல்வதாக, வனப்பணியாளர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது பவானி ஆற்றங்கரையில் சில இறைச்சி துண்டுகள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, உலிக்கல் அருகே நீர்வள ஆதார துறை கட்டுபாட்டில் உள்ள பவானி ஆற்றங்கரையில், புதர் செடிகளுக்கு மத்தியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது கடந்த 4ம் தேதி கண்டறியப்பட்டது.விசாரணையில், கைப்பற்றிய இறைச்சி துண்டுகள், கண்டறியப்பட்ட புள்ளி மானின் இறைச்சி என்பது உறுதியானது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி, 25, சுரேஷ், 29, நாசர் அலி, 22, பாசித்அகமது, 20, வினித்குமார், 21, முகமதுஆசாத், 22, ஆகிய ஆறு பேர், பவானி ஆற்றங்கரையில் இறந்து கிடந்த ஆண் புள்ளி மானை கண்டதும் சமைத்து சாப்பிட திட்டமிட்டு, மானின் இறைச்சியை வெட்டி எடுத்து செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து வந்த வனப்பணியாளர்களை கண்டவுடன், இறைச்சியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.இவர்கள் 6 பேரையும் நேற்று வனத்துறையினர் பிடித்தனர். பின் இவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து, கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 6 பேரும் ரூ.50 ஆயிரம் அபராத தொகையை கட்டினர். இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.