உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கர்நாடகாவில் தவித்த கோவை வாலிப;ர் மீட்டு தாயுடன் சேர்த்த தன்னார்வலர்

கர்நாடகாவில் தவித்த கோவை வாலிப;ர் மீட்டு தாயுடன் சேர்த்த தன்னார்வலர்

கோவை : கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள, குக்கே சுப்ரமணியா பகுதியில் மன வளர்ச்சி குறைந்த வாலிபர் ஒருவர் சாலை ஓரத்தில் யாசகம் கேட்க தெரியாமல், மக்களின் தாக்குதலுக்கு ஆளாகி கொண்டு இருந்தார்.அவர் தமிழில் பேசியதை பார்த்த, அங்குள்ள ஒரு சமூக ஆர்வலர், இதுகுறித்து கோவை நிருபர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். அவர், சமூக ஆர்வலரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் தலைவருமான மகேந்திரனிடம் தெரிவித்தார். அவர், அங்குள்ள சமூக ஆர்வலரை போனில் தொடர்பு கொண்டு, அந்த வாலிபரிடம் பேசினார்.அப்போது அவர், தனது பெயர் சதீஷ் என்றும், தாயார் பெயர் சரஸ்வதி என்றும், ஆர்.எஸ்.புரத்தில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.அதன் பின் மகேந்திரன், சதீஷின் புகைப்படத்தை வைத்து, ஆர்.எஸ்.புரம் பகுதியில் விசாரித்தார். தெப்பக்குளம் மைதானம் பகுதியில் சதீஷின், தாயார் சரஸ்வதியின் வீட்டை கண்டுபிடித்தார். அவரிடம், மகேந்திரன் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் குறித்த தகவலை கேட்டதும், அவர் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்.அவர், தனது மகனை கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு காணாமல் போனதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கோவை வந்துவிட்டதாகவும் கூறி அழுதுள்ளார்.இதையடுத்து மகேந்திரன், சரஸ்வதியை அழைத்துக் கொண்டு கர்நாடகா சென்று சதீஷை மீட்டு வந்தனர்.இதுகுறித்து, ஈர நெஞ்சம் அறக்கட்டளை தலைவர் மகேந்திரன் கூறுகையில், ''தனது மகனை தற்போது வீட்டில் வைத்து பராமரிக்க முடியாது என்பதால், அவரை காப்பகத்தில் வைத்து பராமரிக்க யாராவது உதவ வேண்டும் என, அவரது தாயார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் அவரை தங்க வைத்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ