| ADDED : ஆக 06, 2024 12:19 AM
கோவை:கோவையில் யானை தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவருக்கு நிவாரண உதவி வழங்க, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:யானை வழித்தடத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். யானை - மனித மோதல்களை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கோவை, ஈரோடு பகுதியில் யானை - மனித மோதல்களை தடுக்க வனத்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.நிலச்சரிவு நடந்த, வயநாடு பகுதியில் நிலைமை சரியான பின், தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் அங்கு சென்று, எதனால் நிலச்சரிவு ஏற்பட்டது என ஆராய இருக்கின்றனர். வயநாடு சம்பவத்தை உதாரணமாக கொண்டு யானை வழித்தடங்கள், நிலச்சரிவு பாதிக்கும் இடங்களை ஆராய்ந்து, தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல், மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.