வெயில் தாக்கத்தால் வறண்டு வருகிறது அத்திக்கடவு ஆறு; குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
மேட்டுப்பாளையம்; வெயில் தாக்கத்தால் அத்திக்கடவு ஆறு வறண்டு வருகிறது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் குறைந்து, பவானி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதால், மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவ வாய்ப்புள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லிதுறை, சிறுமுகை, வழியாக பவானி ஆறு செல்கிறது. பவானி ஆற்றில் பில்லுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லுார் அணைக்கு நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. அதே போல் அத்திக்கடவு ஆற்றில் இருந்தும் தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக பில்லுார் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை இல்லை. கோடை காலம் நெருங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பில்லுார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 79 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு வெறும் 34 கன அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.மேட்டுப்பாளையம் நகரத்திற்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி 13 முதல் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.பவானி ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக செல்வதால் இனி வரும் நாட்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் நகர மக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், ''கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது குடிநீருக்கு பிரச்னை இல்லை. ஆனால் வரும் நாட்களில், ஏற்பட வாய்ப்புள்ளதால், மேட்டுப்பாளையம் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விளாமரத்தூர் குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிக்கப்படும். இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்,'' என்றார்.பவானி ஆறு, பில்லுார் அணையில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.----