| ADDED : ஜூலை 26, 2024 10:56 PM
கோவை:பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில் கைதான, சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற மற்றொரு 'யு யூடிப் ' சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் குறித்து, அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக எழுந்த புகாரின்பேரில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் மே 4ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது, கஞ்சா கடத்தல், மோசடி உட்பட மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் மனுக்கள் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டன. அவர் மீது, கோவை, ஜே.எம்:4, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்ற நகல் வழங்கப்பட்டது. குற்றச்சாட்டு குறித்து, வரும் 30ம் தேதி கேள்வி கேட்க விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், ஜாமினில் விடுவிக்க கோரி, அதே கோர்ட்டில் மீண்டும் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். விசாரித்த மாஜிஸ்திரேட் சரவணபாபு, நிபந்தனை ஜாமின் வழங்கி, நேற்று உத்தரவிட்டார். அதன்படி, சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசில் தினசரி ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளிலும் ஜாமின் கிடைத்த பிறகு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.