உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் எடை அதிகரிக்க மாட்டு சாணக்கலவை கட்டலாம்

வாழைத்தார் எடை அதிகரிக்க மாட்டு சாணக்கலவை கட்டலாம்

அன்னுார்:வாழைத்தாரின் எடை அதிகரிக்க, மாட்டு சாணக் கலவையை, வாழைத்தாரில் கட்ட வேண்டும் என, வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். அன்னுார் வட்டாரத்தில், ஜே.கே.கே., முனிராஜா வேளாண் கல்லூரி இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும், பத்து மாணவிகள் தங்கியுள்ளனர். அபிராமி, அனுஸ்ரீ, சுவேதா, வெண்மதி, விதுஷா, விஜயஸ்ரீ, யமுனா, அபிநயா, அபிராமி, யுவபிரியங்கா ஆகியோர் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், அன்னுார் பகுதிகளில், செயல் விளக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்னுார் அருகே காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள முதலிபாளையத்தில், விவசாயிகள் தோட்டத்தில், வாழைத்தாரின் எடையை அதிகரிக்க, தேவையான வழிமுறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். 15 கிராம் யூரியா, 7.5 கிராம் பொட்டாஷின் சல்பேட் ஆகியவற்றை, 100 மில்லி தண்ணீரில் கரைத்து, 500 கிராம் புதிய மாட்டு சாணத்தில் கலக்க வேண்டும். இந்த கலவையை பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி, வாழைத்தாரில் பூ உடைந்த, தண்டு பகுதி முனையில் கட்ட வேண்டும்.இவ்வாறு செய்வதால், தாரில் உள்ள வாழை காய்கள் நன்கு பெரிதாக வளரும். இதனால் வாழைத்தாரின் எடை அதிகரிக்கும் என்ற செயல் விளக்கத்தை, விவசாயிகளுக்கு மாணவிகள் செய்து காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை