கோவை : பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி, கோவையில் 'சீல்' வைக்கப்பட்ட செங்கல் சூளைகள் விவகாரத்தில், ஓட்டு வங்கிக்காக, தி. மு.க., அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாக்குறுதி அளித்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.கோவை மாவட்டத்தில் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை கிராமங்களில், உரிய அனுமதியின்றி ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டன. இவற்றுக்காக நடந்த மண் கொள்ளை, சூழல் பாதிப்பு குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்தது.இவ்வழக்குகளின் மீதான உத்தரவுகளின் பேரில், கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த, 117 செங்கல் சூளைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது; மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. மண் கொள்ளை மற்றும் சூழல் பாதிப்புகளுக்காக, பல நுாறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், கோவை லோக்சபா தொகுதிக்கென பிரத்யேகமாக, தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'செங்கல் உற்பத்தியாளர்களின் பிரச்னைகள் கவனிக்கப்பட்டு, தீர்க்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளிக்கையில், ''கோவையில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படியாக வளர்ச்சி அடைய போகிறது. அத்தருணத்தில் கட்டுமான பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயரக்கூடாது. அதை பாதுகாக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு. அதேநேரம், சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், கட்டுமான தொழிலுக்கும் பாதிப்பு இல்லாத வகையில், அனைவருக்கும் சமமான சூழல் ஏற்படுத்தப்படும். சரியான விலையில் கட்டுமான பொருட்கள் கிடைப்பதற்கான வேலையை அரசு செய்யும்,'' என்றார்.'தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் திரும்பவும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா' என, நிருபர் கேட்ட கேள்விக்கு, ''யார் சரியாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு விடிவு காலம் வரும் காலம் வெகுதுாரம் இல்லை,'' என்றார்.'செங்கல் சூளைகள் இல்லாததால்தான், அப்பகுதியில் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது. மீண்டும் அப்பகுதியில் செங்கல் சூளைகள் வந்தால் எப்படி...' என, மீண்டும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, அமைச்சர் ராஜா, ''சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டும்,'' என்றார்.அமைச்சரின் இத்தகைய பதில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஓட்டு வங்கிக்காக, அமைச்சர் இவ்வாறு பேசுகிறாரோ என்கிற சந்தேகம், அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.