| ADDED : மே 06, 2024 10:37 PM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையம் - குரும்பபாளையம் சர்வீஸ் ரோட்டின் நடுவில், மரக்கன்றுகள் மற்றும் வடிகால் அமைக்காமல் மாற்று இடத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என, அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி அருகேயுள்ள, கிட்டசூராம்பாளையம் பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அருகே, கிட்டசூராம்பாளையம், குரும்பபாளையம் கிராமங்கள் வழியாக திண்டுக்கல் திட்ட அமலாக்க பிரிவின் வாயிலாக, புளியம்பட்டியில் இருந்து ஆச்சிப்பட்டியில், கோவை - பொள்ளாச்சி ரோடு சந்திப்புகளுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வாயிலாக ரோடு அமைக்கப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலையில், இடது மற்றும் வலது பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடுகளின் நடுவில் கிட்ட சூராம்பாளையம் மற்றும் குரும்பபாளையம் ஊராட்சி மற்றும் கிராமங்களில், மரக்கன்றுகள் நடுவதாகவும், வெள்ள நீர் வடிகால் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன.இதனால், சர்வீஸ் ரோடுகளின் பக்கவாட்டு பகுதிகளில், நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளின் போக்குவரத்துக்கு, சர்வீஸ் ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சர்வீஸ் ரோடுகளின் ஒரு பகுதியில் மரங்கள் நடவும், வெள்ள நீர் வடிகால் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்தால் விவசாயிகள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்கும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.