குப்பையை அகற்றுங்க
கிணத்துக்கடவு, அண்ணா நகரில் ரோட்டின் ஓரத்தில் சிலர் இரவு நேரத்தில் குப்பை கொட்டிச்செல்கின்றனர். இதை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் குப்பையை கிளறுவதால், ரோட்டின் நடுவே சிதறிக்கிடக்கிறது. இதனால் இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தி, குப்பையை கொட்ட வேறு இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- - கருணாகரன், கிணத்துக்கடவு. ரோடு சேதம்
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டில் பஸ் உள்ளே நுழையும் இடத்தில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் மற்றும் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்கு செல்லும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த ரோட்டில் உள்ள குழியை சரி செய்ய வேண்டும்.-- மனோஜ், கிணத்துக்கடவு. வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி - கிருஷ்ணா ஆயக்கட்டு ரோடு வழியாக நல்லூர் செல்லும் வழித்தடத்தில் கனிமவளம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் அதிக அளவு செல்வதால் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் மற்ற வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - ஆனந்த், பொள்ளாச்சி. செடிகள் அகற்றப்படுமா
கோவில்பாளையம், காளியண்ணன்புதூர் அரசு பள்ளி சுவற்றின் வெளிப்புறத்தில் அதிக அளவு செடிகள் முளைத்து புதர் போன்று காட்சியளிக்கிறது. இதனால் பூச்சிகள் அதிக அளவு பள்ளி வளாகத்தில் செல்லும் நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி சுவற்றின் வெளிப்புறத்தில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும்.-- கண்ணன், கிணத்துக்கடவு. குரங்குகள் தொல்லை
வால்பாறை நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது. எனவே, வனத்துறை அதிகாரிகள் இதை கவனித்து கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கிருஷ்ணன், வால்பாறை. பாதாள சாக்கடை குழி
உடுமலை, அன்சாரி வீதியில், பாதாள சாக்கடை குழி அடையாளம் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்லும்போது அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடமாகவும் உள்ளது.- சாரதி, உடுமலை. வாகனங்கள் விதிமீறல்
உடுமலை- பழநி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி ஒருவழிபாதையில் செல்வதால், மற்ற வாகனங்கள் வேகமாக செல்லும்போது விபத்து அதிகரிக்கிறது. ஐஸ்வர்யா நகரிலிருந்து வரும் வாகனங்கள் ரோட்டை கடந்து செல்லும்போது இவ்வாறு விதிமுறை மீறுவோரால் குழப்பத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.- மாதவன், உடுமலை. பிளாஸ்டிக் கழிவுகள்
உடுமலை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்நடைகள் தொடர்ந்து அவற்றை மேய்கின்றன. அடிக்கடி கழிவுகளை கல்லுாரி ரோட்டில் குவித்து எரிப்பதால், அப்பகுதி புகை மண்டலமாகவும் பரவுகிறது.- பழனிவேல், மலையாண்டிபட்டிணம். கழிவுகளை அகற்றணும்
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இக்கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை. வேகத்தடைக்கு அடையாளமில்லை
போடிபட்டி, முருகன் கோவில் அருகே வேகத்தடை அடையாளம் அழிந்துவிட்டதால் சுற்றுலா வரும் பயணியர் வேகமாக வரும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் வேகத்தடையில் தடுமாறி அருகில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளின் மீது வாகனத்தை விடுகின்றனர்.- ரமேஷ், உடுமலை. சு காதாரம் பாதிப்பு
உடுமலை, பார்க் ரோடு அரசு பள்ளி எதிர்புறம் திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறி வருகிறது. 'குடி'மகன்கள் பள்ளிக்கு எதிரே அமர்ந்து மது அருந்துவதும், சிறுநீர் கழிப்பதுமாக உள்ளனர். இதனால் பள்ளி குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. குடிமகன்களால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.- பாலகுமார், உடுமலை. போக்குவரத்து பாதிப்பு
உடுமலை - பழநி ரோட்டில், தேசிய நெடுஞ்சாலையோரம், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, விதிமுறை நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.