| ADDED : ஏப் 07, 2024 01:05 AM
கோவை;குமரகுரு கல்வி நிறுவனங்களின் சார்பில், அருட்செல்வர் டாக்டர் என். மகாலிங்கம் விருது வழங்கும் நிகழ்வு, நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தலைமைவகித்து, நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இதில் அவர் பேசுகையில், ''பட்டம் வாங்குவதுடன் முடிவது கல்வியல்ல. வாழ்கை முழுவதும் தேடல் இருப்பவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கின்றனர். அறிவுத்திறனுடன் நல்ல பண்புகளையும், கற்றுத்தருவதே சிறந்த கல்வி.அறிவுத்திறனை 'அப்டேட்' செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறிய வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல், தேடல் எப்போதும் தொடர வேண்டும்,'' என்றார்.நிகழ்வில், 2024ம் ஆண்டுக்கான, 'அருட்செல்வர் டாக்டர் என். மகாலிங்கம் விருது' புனேவிலுள்ள, எம்.ஐ.டி., குழும நிறுவனங்களின் நிறுவன தலைவர் விஸ்வநாத் கரட்டுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், தாளாளர் பாலசுப்ரமணியம், இணை தாளாளர் சங்கர் வாணவராயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.