கோவை;எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், 'சிவில் இன்ஜினியர்'களாக பணிபுரியும் கூத்து, கோவை மாநகராட்சியில் நடக்கிறது. இவர்கள் வார்டு இன்ஜினியர்களாக பணிபுரிந்து, புதிதாக தார் ரோடு, மழை நீர் வடிகால், பாலம் கட்டினால், அதன் தரம் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்!கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ., பரப்பு கொண்டது; 100 வார்டுகள் உள்ளன. தோராயமாக, 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பணி நிமித்தமாக, 2 லட்சம் மக்கள், நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதற்கேற்ப திட்டமிட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு, கடமை.மாநகராட்சியில் பொது சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு என்கிற இரு பிரிவுகள், இந்நகருக்கு இரு கண்கள் போன்றவை. வீதியில் இஷ்டத்துக்கு கொட்டப்படும் குப்பையை சுத்தம் செய்வது, சாக்கடை கால்வாய்களை துார்வாருவது உள்ளிட்ட பணிகளை, சுகாதாரப் பிரிவினர் மேற்கொள்கின்றனர்.அடுத்ததாக, பொறியியல் பிரிவினரின் பங்கு மிகப்பெரியது. இவர்களே மழை நீர் வடிகால் கட்டுகின்றனர்; ரோடு போடுகின்றனர்; பாதாள சாக்கடை குழாய் பதிக்கின்றனர். தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கின்றனர். பொறியாளர்கள் எண்ணிக்கை
பாலங்கள் கட்டுதல், பூங்கா அமைத்தல், சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்கின்றனர். மத்திய - மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களையும் செயலாக்கத்துக்கு கொண்டு வருகின்றனர். அதனால், இரு வார்டுக்கு ஒருவர் வீதம், 50 உதவி/ இளம் பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.ஆனால், அரசாணை: 152ல் மண்டலத்துக்கு 8 பேர் வீதம், 40 பேர் மட்டுமே நியமிக்க பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள், கோவை மாநகராட்சி பரப்புக்கு பணியாற்ற போதாது. ஆனால், தற்போது, 27 உதவி பொறியாளர்களே பணிபுரிகின்றனர்.13 பணியிடங்கள் காலியாக இருப்பதால், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் நிலை - 2 பணியில் இருப்போருக்கு, தற்காலிக பணி என்கிற அடிப்படையில், வார்டு இளம் பொறியாளர் பணி வழங்கப்பட்டு இருக்கின்றன.விதிமுறைப்படி, இவர்கள், உதவி பொறியாளர்களுக்கு உதவியாளராக பணியாற்ற வேண்டும். ஆனால், உதவி பொறியாளர்களாகவே நியமித்திருப்பது விதிமீறல். இவர்கள் சிவில் இன்ஜினியர்கள்!
இதேபோல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், 'சிவில் இன்ஜினியர்'களாக பணிபுரிகின்றனர்.மெக்கானிக்கல் படித்தவர்களை, மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க வேண்டிய பணிமனையில் நியமிக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் படித்தவர்களை, தெருவிளக்கு பராமரிப்பு பணியில் நியமிக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களை, கம்ப்யூட்டர் தொடர்பான பணிக்கு நியமிக்க வேண்டும். மாறாக, 'சிவில் இன்ஜினியர்'களாக நியமித்திருப்பதால், மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பணிகளின் தரம், கேள்விக்குறியாகி இருக்கிறது.எந்தவொரு வேலை செய்தாலும் தரம் முக்கியம். ஆனால், நம்மூர் கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், 'தரம் கிலோ என்ன விலை' என கேட்பார்கள். அந்தளவுக்கு தரத்தை பற்றி எந்த கவலையும் படாமல் பணியாற்றுவதே இவர்களின் சிறப்பு. இதோ உதாரணங்கள்!
இதற்கு ஏராளமான உதாரணங்களை சொல்லலாம். அதில், சில மாதங்களுக்கு முன், புதிதாக போடப்பட்ட தார் ரோடு பிளந்து, லாரிகள் மற்றும் பஸ்கள் நிலத்துக்குள் புதைந்தது பலருக்கும் நினைவில் இருக்கும்.மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற சிவகுரு பிரபாகரன், பொறியியல் பிரிவு அதிகாரிகளின் தகுதியை ஆய்வு செய்தார். துறை ரீதியாக, அவர்களது அறிவை சோதிக்க, பொறியியல் பிரிவினருக்கு 'டெஸ்ட்' வைத்தார்.'சிலபஸ்' அனுப்பி, தேர்வு வைத்தார். கேள்விகளுக்கான பதில்களை, 'சிலபஸ்' பார்த்து எழுதலாம் என்கிற சலுகை அளித்தார். அதாவது, கேள்வியை புரிந்து, சரியான பதிலை தேடிக் கண்டுபிடித்து எழுதுகிறார்களா என சோதித்துப் பார்த்தார். அவ்வாறு எழுதுவதற்கே பலரும் திணறினர்.இருப்பினும், அவர்கள் மீது கரிசனம் காட்டிய கமிஷனர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள், இப்போதும் வார்டு இன்ஜினியர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் புதிதாக தார் ரோடு, மழை நீர் வடிகால், பாலம் கட்டினால், அதன் தரம் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்!