| ADDED : ஏப் 18, 2024 04:05 AM
கிணத்துக்கடவு, : லோக்சபா தேர்தலில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட முடியாததால் அவதிப்படுகின்றனர்.லோக்சபா தேர்தல் நாளை, 19ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிரமமாக இருப்பதால், தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்தனர்.இதில், வீட்டில் இருந்து ஓட்டு போட விருப்பம் தெரிவித்த நபர்களிடம் இருந்து ஓட்டுப்பதிவு செய்யப்பட்டது.அரசு சார்பில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான இடங்களில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட, விருப்பம் தெரிவித்தும், ஓட்டுப்பதிவு செய்யப்படவில்லை.வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடுவது சிரமம் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்தது. தேர்தல் ஆணையத்தில் அறிவுரையை பின்பற்றி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்படாததால், அவர்கள் அவதிப்படுகின்றனர். தேர்தல் அதிகாரிகள் முறையான விழிப்புணர்வு செய்ய தவறியதே இதற்கு காரணமாகும், என, பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.