| ADDED : மே 27, 2024 02:06 AM
கோவை:கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களின் உதவிக்காக, அவர்களது குடும்பத்தினரும் உடன் வந்து செல்கின்றனர். தொலைவில் இருந்து வருபவர்களில் சிலர், கையோடு உணவை எடுத்து வந்து விடுகின்றனர்.சிலர் கடையில் வாங்கி கொள்கின்றனர். மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து உணவருந்தி கொள்கின்றனர். கீழே சிந்தும் மிச்சம் மீதி உணவை தேடி எலி, பெருச்சாளிகள் வந்து விடுகின்றன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள, அம்மா உணவகம் அருகேயும் உணவை தேடி எலிகள் வந்து விடுகின்றன.இரவு நேரங்களில் நோயாளிகளின் வார்டுகளில் புகுந்து விடுகின்றன. நோயாளிகளும், உடன் இருப்பவர்களும், அச்சம் அடைகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:நோயாளிகளுடன் இருப்பவர்கள், கீழேதான் படுத்து துாங்க வேண்டும். எலிகள், பெருச்சாளிகள் கடித்துவிடும் என பயமாக உள்ளது.மருத்துவமனை வளாகத்தில் சில இடங்களில் எலி, பொந்துகள் உள்ளன. அதனை அடைத்து எலி, பெருச்சாளிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். மீண்டும் வராமல் தடுக்க வேண்டும். பொதுமக்களும் உணவருந்தியபின், சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.பல்வேறு மாநிலங்களில், எலி கடித்து பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. சில அரசு மருத்துவமனையில் எலிகள் கேன்டீன், பிணவறை போன்ற பகுதிகளில் புகுந்து விளையாடி உள்ளன. இந்த நிலை, கோவை அரசு மருத்துவமனையில் நடப்பதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, எலிகளினால் பிற நோய்கள் வரும் முன் இதை தடுக்க வேண்டும்.