உடுமலை : தமிழக அரசு அறிவித்துள்ள, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், சொந்த நிலம் உள்ள கிராமப்புற மக்கள், 3.50 லட்சம் ரூபாய் மானியத்தில் கான்கிரீட் வீடு கட்டலாம். இத்திட்டத்தில், 360 சதுரடி பரப்பில் வீடு கட்ட மானியம் கிடைக்கும்.இதனால், கிராமப்புற மக்கள் தற்போது வீடு கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். புதிதாக விண்ணப்பிக்கவும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.வீடு கட்ட தேவையான கம்பி, சிமென்ட் வகைகளை, அரசு வழங்கும். வீடு கட்டும் போது, நான்கு கட்டமாக, மானியத்தொகை, பயனாளியின் வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படும். அரசு அனுமதித்துள்ள, 360 சதுரடி பரப்பளவில், வீடு கட்ட ஏதுவாக, நான்கு மாடல்களை வீடு கட்டலாம் என்று அரசு, வரைபடங்களை வெளியிட்டுள்ளது.ஒரு படுக்கை அறை, ஒரு வரவேற்பறை, ஒரு சமையல் அறை மற்றும் கழிப்பிடம் கட்ட மாடல்கள் வழங்கப்பட்டுள்ளது. இடவசதிக்கேற்ப, சிறிய இரண்டு படுக்கை அறைகள் கட்டவும் மாடல் கொடுக்கப்பட்டுள்ளது. சமையல் அறை மட்டும் (60 சதுரடி) பாதுகாப்பான மேற்கூரையிலும், மற்ற அறைகள் (300 சதுரடி)கான்கிரீட் வாயிலாகவும் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு வெளியிட்டுள்ள நான்கு மாடல்களில், ஏதாவது ஒரு மாடலில் வீடு கட்ட முடிவு செய்ய வேண்டும்,' என்றனர்.