வால்பாறை : சோலையாறு அணை மீண்டும் நிரம்பியதால், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வெளியேற்றப்படுகிறது.வால்பாறையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, கூழாங்கல் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.தொடர்ந்து பெய்த கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த மாதம், 19ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதன்பிறகும் மழையின் தீவிரம் குறையாததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த மாதம் 30 ம் தேதி காலை, அணை நீர்மட்டம் அதிகபட்சமாக, 164 அடியாக உயர்ந்ததும், பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.இதனிடையே, கடந்த வாரம் மழைப்பொழிவு குறைந்ததால், சோலையாறு அணையின் நீர்மட்டம், 159 அடிக்கு குறைந்தது. கடந்த நான்கு நாட்களாக வால்பாறையில் கனமழை பெய்வதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நேற்று காலை நீர்மட்டம், 160 அடியாக உயர்ந்தது. அணைக்கு, 987 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து, 659 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 14, சோலையாறு - 4, பரம்பிக்குளம் - 29, கீழ்நீராறு - 5, காடம்பாறை - 8, துாணக்கடவு - 12, பெருவாரிப்பள்ளம் - 20, பொள்ளாச்சி - 30 என்ற அளவில் மழை பெய்தது.