உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இஷ்டத்துக்கு வெட்டிச் சாய்க்கப்படும் மரங்கள் வருவாய்த்துறையினர் ஆதரவு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

இஷ்டத்துக்கு வெட்டிச் சாய்க்கப்படும் மரங்கள் வருவாய்த்துறையினர் ஆதரவு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சமீபகாலமாக, கோவையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவது தொடர்கிறது. மரங்களை காக்க வேண்டிய வருவாய்த்துறையினரே, அனுமதி உத்தரவு வழங்குவதால், சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பை, 23.8 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்த வேண்டியுள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்க, சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும். அதற்காக, மரக்கன்று நடும் பணியை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் வனத்துறை, வேளாண்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆங்காங்கே 'மியாவாக்கி' முறையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'டுகளில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.அரசின் வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருப்பின், அவற்றை வெட்டி வீழ்த்தாமல் வேரோடு பெயர்த்தெடுத்து, வேறொரு இடத்தில் மறுநடவு செய்யப்படுகிறது.இவ்வகையில், மேற்குப்புறவழிச்சாலை திட்டம்; சத்தி ரோடு விரிவாக்கப் பணிகளுக்கு ரோட்டின் இரு புறமும் இருந்த மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, மறுநடவுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.இதேபோல், அவிநாசி ரோடு மேம்பாலப் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு, மறுநடவு செய்யப்பட்டு வருகின்றன.இச்சூழலில், தனி நபர்கள், மரங்களின் அவசியத்தை உணராமல், தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.மரங்களை வெட்டுவதற்கு முன் வருவாய்த்துறையில் அனுமதி பெற வேண்டும். தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் கையெழுத்திட்டு உத்தரவு கடிதம் வழங்கினால் மட்டுமே தனி நபர்கள் மரத்தை வெட்ட முடியும்.பொய் காரணங்கள்மரங்களை வெட்டுவதற்கு அரசு அலுவலகங்களில், அவ்வளவு எளிதாக உத்தரவு பெற முடியாது என்பதற்காக, இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. சமீபகாலமாக, பொய்யான காரணங்களை குறிப்பிட்டு, அனுமதி உத்தரவு வழங்கப்படுகிறது.அந்த கடிதத்தை வைத்துக் கொண்டு, மனசாட்சியே இல்லாமல் மரத்தை வெட்டிச் சாய்த்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள், கோவை நகர்ப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது.மரங்களை பாதுகாக்க வேண்டிய வருவாய்த்துறையினரே, அவற்றை வெட்டுவதற்கு அனுமதி கொடுப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'ஆக்சிஜன் வங்கிகளே மரங்கள்'

இதுதொடர்பாக, 'கிரீன் கேர்' அமைப்பு நிறுவனர் சையத் கூறியதாவது:இலக்கு நிர்ணயித்து, கணக்கு காட்டுவதற்காக மரக்கன்று நடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணிக்கையை காட்டுவதை விட, மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்.மரங்கள் நமக்கு உயிரூட்டும் ஆக்சிஜன் வங்கி. நடப்படும் மரங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்காக மரங்களை வெட்டலாம் என்கிற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்களில், வெட்டி வீழ்த்துவதற்கு பதிலாக மறு நடவு செய்ய வேண்டும். எங்காவது மரம் வெட்டுவதை அறிந்தால், பொதுமக்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ