உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்கு புறவழிச்சாலை பணி என்னாச்சு; வாகன ஓட்டுநர்கள் அவதி!

மேற்கு புறவழிச்சாலை பணி என்னாச்சு; வாகன ஓட்டுநர்கள் அவதி!

ஒளிராத தெருவிளக்கு

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 21வது வார்டு திலகர் வீதியில் தெருவிளக்குகள் ஒளிராமல் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து விரைவில், தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.-- -பாலாஜி, பொள்ளாச்சி.

ரோடு படுமோசம்

கிணத்துக்கடவு, அண்ணாநகர் 2வது தெருவில் உள்ள ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இரவு நேரத்தில் மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க திட்டமிட வேண்டும்.-- -அரவிந்த், கிணத்துக்கடவு.

வேகத்தடை தேவை

வால்பாறை நகரில், பரவலாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் அதிக வேகமாக சென்று வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, அபாயமான பகுதியில் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.-- -சாரு, வால்பாறை.

பாதாள சாக்கடையால் விபத்து

பொள்ளாச்சி, அன்சாரி வீதியில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, பாதாள சாக்கடை மூடியை விரைவில் சரி செய்ய வேண்டும்.-- -ஆனந்த், பொள்ளாச்சி.

குளக்கரையில் குப்பை

உடுமலை ஊராட்சி ஒன்றிய கண்ணமநாயக்கனுார் ஊராட்சி கன்டியகவுன்டன்புதுார் குளக்கரையில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், கண்டியகவுன்டன்புதார்.

எப்ப ரோடு போடுவீங்க !

பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ரோட்டில் இருந்து, ஆர்.பொன்னாபுரம் வழியாக நல்லுாரை அடையும் வகையில் மேற்கு புறவழிச்சாலை திட்ட பணி துவங்கப்பட்டது. இதற்காக, ஆர்.பொன்னாபுரம் வழித்தடத்தில் ரோடு தோண்டப்பட்டு நான்கு ஆண்டுகளாகிறது. இன்னும் ரோடு அமைக்கவில்லை. மக்கள் நலன் கருதி ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.-- -சண்முகம், வடக்கிபாளையம்.

கால்வாயில் கழிவுகள்

உடுமலை, கொல்லம்பட்டறை பகுதி கழிவுகள் தங்கம்மாள் ஓடை கால்வாயில் கொட்டப்படுகிறது. கழிவுகள் குவிந்துள்ளதால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஓடையில் தேங்குகிறது. அப்பகுதியினர் குப்பைக்கழிவுகளை ஓடையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.- நந்தினி, உடுமலை.

அடையாளம் இல்லை

உடுமலை, ராமசாமிநகரிலிருந்து அரசு தொழிற்பயிற்சி நிலையம் செல்லும் ரோட்டில் வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளது. அந்த வழியில் உள்ள மாணவர் விடுதி அருகில் ரோடு சேதமடைந்தும் உள்ளது. இதனல் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.- கவின்பிரியா, உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை, தினசரி சந்தை ரோட்டில் காய்கறி சரக்கு வாகனங்கள் ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின்றன. காலை நேரங்களில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தையில் இருந்து சரக்கு வாகனங்கள் வேகமாக ரோட்டை நோக்கி திடீரென வருவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.- ஜெயசித்ரா, உடுமலை.

இருளில் இணைப்புச்சாலை

உடுமலை - கொழுமம் ரோடு பிரிவில் இருந்து, ராமசாமி நகருக்கு செல்லும் 100 அடி இணைப்புச் சாலை கடந்த சில நாட்களாக இருளாக உள்ளது. அங்குள்ள அனைத்து தெருவிளக்குகளும் எரிவதில்லை. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட ஏதுவாக உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், ராமசாமி நகர்.

குப்பைக்கு தீ வைப்பு

உடுமலை, சின்னவீரம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. அவற்றை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரிக்கக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுத்துகிறது.- கனகராஜ், உடுமலை.

கால்வாய் கரை சேதம்

வேட்டைக்காரன்புதூர் கால்வாயில், சரளப்பதி ரோடு அருகில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே கரையின் ஒருபுறத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் இதை கவனித்து, கரையோரம் விரிசல் ஏற்பட்ட பகுதியை விரைவில் சீரமைக்க வேண்டும்.-- -கணேஷ்குமார், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ