| ADDED : மே 17, 2024 10:38 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் தனியார் டூரிஸ்ட் பஸ் மோதி, 35 வயது இளைஞர் ஒருவர் பலியான விவகாரத்தில் பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயில் அருகே கடந்த 13ம் தேதி, அதிகாலை 5 மணி அளவில், சுமார் 35 வயது உள்ள இளைஞர் ஒருவர், இடுப்பு பகுதியில் பலத்த அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக, பொதுமக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்று இதுவரை தெரியவில்லை.இதைத் தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமரா வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தனியார் டூரிஸ்ட் பஸ் ஒன்று, அந்த இளைஞர் மீது ஏறி, இறங்கியதும் அதன் பின் பஸ்சின் டிரைவர் மற்றும் வேறொரு நபர் இறந்தவரின் உடலை ஓரமாக எடுத்து வைப்பதும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனிடையே இந்த பஸ்சின் டிரைவரான பெங்களூரை சேர்ந்த சிவராஜூ, 42 நேற்று மேட்டுப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.---