அன்னுார்:கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில், 100 நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை, இந்த ஆண்டு இதுவரை நடைபெறவில்லை. இதனால் முறைகேடுகள் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியில், நடக்கும் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சிஒன்றியங்களில், 228 ஊராட்சிகளிலும், தினமும் சராசரியாக, 15 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். சமூக தணிக்கை
அன்னுார் ஒன்றியத்தில், ஒவ்வொரு ஆண்டும், 12 கோடி ரூபாய்க்கு, பணிகள் நடக்கிறது. இந்தத் திட்டத்தில், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்காமல், இயந்திரங்களைக் கொண்டு பணி செய்யப்படுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும், ஊரக வளர்ச்சி துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை சமூக தணிக்கையை கட்டாயமாக்கியது. இதன்படி பணிகள் சமூக தணிக்கை செய்யப்பட வேண்டும். சமூக ஆர்வலர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய சமூக தணிக்கை குழு வாயிலாக, சமூக தணிக்கை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. தணிக்கை செய்யும் நபர்கள் ஊராட்சி நிர்வாகத்தின் உறவினர்களாக இருக்கக் கூடாது என தெரிவித்தது. முறைகேடு
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2023 ஏப். 1ம் தேதி முதல் 2024 மார்ச் வரை, செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் இதுவரை சமூக தணிக்கை செய்யப்படவில்லை. இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பின், மிகத் தாமதமாக சமூக தணிக்கை செய்யும்போது, அதை கண்டறிய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. புகார்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்தத் திட்டத்தில் குளம், குட்டைகள் தூர் வாரும் பணி செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் நடப்படுகிறது. சுகாதார வளாகம் அமைக்கப்படுகிறது. தனியார் தோட்டங்களில், வட்டப் பாத்தி மற்றும் வரப்பு அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை பணி முடித்த ஆறு மாதத்திற்குள் ஆய்வு செய்தால் மட்டுமே, குறிப்பிட்ட அளவுக்கு பணி செய்துள்ளார்களா என கண்டறிய முடியும். பணி செய்யாமலேயே நிதி செலவிடப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ள முடியும்.தற்போது, 2023 ஏப்ரலில் செய்யப்பட்ட பணியை, ஒன்றே கால் ஆண்டு கழித்து, சமூக தணிக்கை செய்தால் அளவுகள் மாறிவிடும். அந்தப் பணியில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் அதே அளவில் இருக்காது. எனவே புகார் கூறும் போது ஊராட்சி நிர்வாகம், மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் அந்த சொத்து அளவு மாறிவிட்டது என்று காரணம் கூறி தப்பித்துக் கொள்கிறது. நடவடிக்கை
சிறப்பு கிராம சபை கூட்டத்தில், சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் நிதி இழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எதுவும் நடைபெறவில்லை. தமிழக அரசு உடனடியாக சமூக தணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.