| ADDED : ஜூலை 14, 2011 09:14 PM
அன்னூர் : அன்னூர் வட்டாரத்தில் 145 மகளிர் சுய உதவி குழு துவக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மகளிர் திட்டம், 'சேவா பாரதி' மூலம்
அன்னூர் வட்டாரத்தில் 145 மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மகாத்மா
காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி புரிவோர்,
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து குழுக்கள் துவக் கும்படி,
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, கஞ்சப்பள்ளி ஊராட்சி
தாசபாளையத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மத்தியில்
இரண்டு குழுக்கள் துவக்கப்பட்டன. துவக்க நிகழ்ச்சியில், சேவா பாரதி மாவட்ட
செயலாளர் பாலசுப்ரமணியம் பேசுகையில்,''குழு துவங்குவதன் மூலம் தொடர்ச்சியாக
சேமிக்கும் பழக்கம் உண்டாகிறது. அவசர தேவைகளுக்கு குழுவில் உள்கடன் பெற
முடியும். சிறு தொழில் செய்ய தேவையான பயிற்சியும், வழிகாட்டுதலும் வங்கி
வழங்குகிறது. தொழில் கடனும் மானியத்துடன் வழங்கப்படுகிறது. குழுவில்
இணைவதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, தன்னம்பிக்கை
அதிகரிக்கும்,''என்றார். மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஜோதி,
கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.