கோவை;கோவை மாவட்டத்தில், 2025 - 2026 கல்வியாண்டில் கல்வி பயின்று கொண்டிருந்த 5,730 மாணவர்கள், நீண்ட காலமாக இடைநின்றதால், 'பள்:ளி செல்லா குழந்தைகள்' எனக் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில், 1,472 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை, அரசுப் பள்ளிகளில் பயின்ற இவர்களில், 5,188 மாணவர்கள் எதனால் பள்ளிக்கு வரவில்லை என்பது குறித்த காரணங்களை, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கண்டறிந்து(எஸ்.எம்.சி.,), தகவல் சேகரித்துள்ளனர். இதில், 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. உடல்நலப் பிரச்னைகள், குடும்ப சூழல் உள்ளிட்டவை அதற்கான காரணங்கள் என தெரியவந்துள்ளது. கண்டறியப்பட்ட மாணவர்களில், முதல் கட்டமாக 1,472 பேரை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களில் சுமார் 600 பேர், பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு புலம்பெயர்ந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள். இவர்களைத் தவிர, கடந்த அக்., வரை 1,863 குழந்தைகள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடாமல் இருக்க, அவர்களின் வீடுகளுக்கே சென்று, பெற்றோர், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில், பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்ட மொத்தம் 5,730 மாணவர்களில், 4,258 மாணவர்கள் தொழிற்கல்வி, தையல் பயிற்சி, பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் துறைகளில் சேர்ந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.