மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைகளுக்கு...
20-Mar-2025
கோவை : மாநிலம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஸ்கேன் சென்டர்களில், 30 சதவீதம் வரை ரொக்கமாக செலுத்த அனுமதிக்கலாம் என, தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் சென்டர்கள், தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இம்மையங்களில் முன்பு நடந்த சில முறைகேடுகள் காரணமாகவும், பணம் கையாள்வதில் ஏற்பட்ட நிர்வாக காரணங்களாலும், நோயாளிகளிடம் இருந்து, ரொக்கமாக பணம் பெறுவது நிறுத்தப்பட்டது. யு.பி.ஐ., ஜி.பே., கார்டு வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும் என்ற உத்தரவால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். வங்கி கணக்கு இல்லாதவர்கள், வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்கள், ஆன்லைன் பரிவர்த்தனை விழிப்புணர்வு இல்லாதவர்கள், ஆண்டிராய்டு மொபைல் போன் இல்லாதவர்கள் கடுமையாக அலைக் கழிப்புக்கு ஆளானார்கள். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக் கொள்ள வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை ரேடியாலஜி பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது, 30 சதவீதம் வரை நோயாளிகளிடம் ரொக்கமாக பெறலாம் என, வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. குறிப்பாக, இதுபோன்ற ஆன்லைன் விழிப்புணர்வு இல்லாதவர்கள், படிக்காதவர்களிடம் ரொக்கம் பெற்றுக்கொள்ளவும், இரவு நேரங்களில் கெடுபிடியை குறைக்கவும் கூறியுள்ளனர். தற்போது அவசியம் உள்ளவர்களிடம் ரொக்கம் பெறுகிறோம்'என்றனர்
20-Mar-2025