ஏ.சி., நிறுவனம் செய்த சேவை குறைபாடு; வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர உத்தரவு
கோவை : ஏ.சி., தயாரிப்பு நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை, துடியலுார், வீரநாச்சி தோட்டம் பகுதியை சேர்ந்த சிபி, காந்திபுரம் நுாறடி ரோட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில், 2023, ஏப்., 18ல், டெய்கின் நிறுவனம் தயாரித்த, இரண்டு ஏ.சி., வாங்கினார். இதற்காக, 1.13 லட்சம் ரூபாய் செலுத்தினார். புதிய ஏ.சி.,க்கு ஓராண்டு வரை இலவச சர்வீஸ் செய்வதற்காக, 'வாரன்டி கார்டு' கொடுத்தனர்.இந்நிலையில், சர்வீஸ் செய்வதற்காக நிறுவனத்திற்கு, மொபைல் போனில் அழைத்து தகவல் தெரிவித்தார். வாட்ஸ் ஆப் வாயிலாகவும் தகவல் அனுப்பினார்.ஏ.சி., மெக்கானிக் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் மெக்கானிக் வரவில்லை. சர்வீஸ் செய்வதற்கு தாமதம் ஆனதால், ஏ.சி.,யில் குளிரூட்டும் தன்மை குறைய ஆரம்பித்தது. இதனால், சிபி வேறு சர்வீஸ் சென்டர் ஆட்களை வரவழைத்து, பழுது பார்த்தார். இதற்கு, 3,000 ரூபாய் செலவானது.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிபி வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள்பிறப்பித்த உத்தரவில், ' ஏ.சி., தயாரிப்பு நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.