கூடுதலாக துாய்மை பணியாளர்கள் வடக்கு ஒன்றியத்தில் நடவடிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், கூடுதலாக துாய்மை பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 39 கிராம ஊராட்சிகளில், குப்பையை அகற்றுவது, தரம் பிரித்து உரமாக்குவது, மக்காத குப்பையை உரிய முறையில் மறுசுழற்சி செய்வது, திடக்கழிவு மேலாண்மை என, சுகாதாரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், ஊராட்சிகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கிறது.பல கிராமங்களில், குப்பையை தரம் பிரித்து பெறுவதற்கு துாய்மை பணியாளர்கள் கிடையாது. மொத்தம், 180 துாய்மைப் பணியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், வீடுகள்தோறும், தினந்தோறும் குப்பையை வகைப் பிரித்து பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆங்காங்கே சாலையோரம் குப்பை தேக்கமடைந்து, அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், கூடுதலாக 51 துாய்மை பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது, 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: குப்பை அள்ளி செல்லும் பேட்டரி வாகனம், ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஊராட்சி முழுக்க குப்பையை முழுமையாக அகற்றுவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 150 வீடுகளுக்கு நான்கு துாய்மைப் பணியாளர்கள் அவசியம். அவ்வகையில் கூடுதலாக, 51 துாய்மை பணியாளர்களை நியமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட, 16 துாய்மைப் பணியாளர்கள் ஆச்சிப்பட்டி ஊராட்சியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள, 35 துாய்மைப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கூறினர்.