| ADDED : நவ 20, 2025 05:24 AM
வால்பாறை: வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், வனவிலங்குகள், பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. இதற்கு மாற்றாக காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை மற்றும் நகராட்சி சார்பில், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் சில கடைகளிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் தடை உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணியர் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் கவர்களை, ரோட்டில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.