உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அமரர் ஊர்தியாகும் ஆம்புலன்ஸ்கள் கண்டறிந்து கட்டுப்படுத்தணும்

 அமரர் ஊர்தியாகும் ஆம்புலன்ஸ்கள் கண்டறிந்து கட்டுப்படுத்தணும்

பொள்ளாச்சி: நோயாளி பயன்பாட்டிற்கான தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே, இறந்த சடலத்தையும் எடுத்துச் செல்லப்படுவதை கண்டறிந்து தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், தலைமை அரசு மருத்துவமனை உட்பட தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், கோலார்பட்டி, வேட்டைக்காரன்புதுார், கோட்டூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது. பிரசவம், விபத்து சிகிச்சை என, இதர மருத்துவ தேவைக்காக 10க்கும் மேற்பட்ட '108' ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இறந்தவர்களின் சடலத்தை அரசு மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்தச் செல்ல அமரர் ஊர்தி சேவையும் உள்ளது. இவ்வாறு, இருக்கையில், சில தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில், அவ்வப்போது, இறந்தவர்களின் சடலத்தையும் எடுத்துச் செல்வதால், அதிருப்தி நிலவுகிறது. இத்தகைய செயலை கண்டறிந்து தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது: இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனம், பொதுவாக சிறப்பு வடிவமைப்பில் வேறுபடுகிறது. போக்குவரத்தின் போது சடலத்தின் பாதுகாப்பிற்கு ஏற்ற வெப்பநிலையை பராமரிக்க, குளிரூட்டும் பெட்டிகள் இருக்கும். ஆனால், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை பொறுத்தமட்டில், சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனத்திலேயே, இறந்தவரின் சடலம் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும், சுத்தப்படுத்துவது, பராமரிப்பு என்ற பெயரில் கூடுதல் தொகையும் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டாண சூழல் என்பதால் எவரும் இது குறித்து கேள்வி எழுப்புவதுகிடையாது. இதை கண்டறிந்து தடுக்க வேண்டும். சடலத்தை எடுத்து செல்வதற்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியாக வைத்து பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்