டூவீலர் ஸ்டாண்டாக மாறிய அண்ணா வணிக வளாகம்
மேட்டுப்பாளையம் ; பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நகராட்சி அண்ணா வணிக வளாக காலியிடம், டூவீலர் ஸ்டாண்டாக மாறியுள்ளது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, நகராட்சி அண்ணா வணிக வளாகத்தில், 44 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொருள் வாங்க வரும், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த, காலி இடம் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் வெளியூர் வேலைக்கு செல்லும் ஆட்கள், வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இது குறித்து நகராட்சி கடை வியாபாரிகள் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் கடைகளின் வாடகையை உயர்த்தி உள்ளது. இந்த வாடகையை மிகுந்த சிரமத்திற்கு இடையே செலுத்தி வருகிறோம். கடைகளின் முன்புள்ள காலி இடத்தில், கடைக்கு பொருட்களை வாங்க வரும், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர். ஆனால் சில மாதங்களாக, அண்ணா வணிக வளாகத்தின் முன்புள்ள காலி இடத்தில், கோவை, திருப்பூர், ஊட்டி, கோத்தகிரி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வாகனங்களை காலையிலேயே, நிறுத்தி விட்டு செல்கின்றனர். காலை, 9:00 மணிக்குள் வணிக வளாகம் முழுவதும், டூவீலர் ஸ்டாண்ட் போல் வாகனங்கள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த, இட வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் சில வாடிக்கையாளர்கள் வேறு இடங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் அண்ணா வணிக வளாகத்தில், வேலைக்கு செல்பவர்கள் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.