உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துட்டு வெட்டுறீங்களா...இல்லை பைன் தீட்டட்டுமா? எப்.எஸ்.ஓ., அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்

துட்டு வெட்டுறீங்களா...இல்லை பைன் தீட்டட்டுமா? எப்.எஸ்.ஓ., அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்

கோவை : முறையாக உரிமம் வைத்திருந்தும், நேர்மையற்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிலர் ஆண்டுக்கு குறிப்பிட்டதொகை கேட்டு, மிரட்டி பறிப்பதாக வியாபாரிகள் குமுறுகின்றனர்.உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்(எப்.எஸ்.ஓ.,) ஹோட்டல்கள், பேக்கரி, துரித உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் புகாரின் பேரிலும், திடீர் ஆய்வு நடத்தியும், விதிமீறல்கள் இருக்கும் கடைகளுக்கு 'சீல்' வைப்பது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.அதேசமயம், ஆவணங்களை முறையாக வைத்திருக்கும் இடங்களில், மிரட்டி பணம் பறிப்பதாகவும், மறுத்தால் ஆய்வு என்ற பெயரில் வேண்டுமென்றே பழிவாங்குவதாகவும் வியாபாரிகள் புலம்புகின்றனர்.

விதிமுறைக்கு கட்டுப்படுகிறோம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின், கோவை மாநகர மாவட்ட தலைவர் லிங்கம் கூறியதாவது:சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரத்தில் உள்ள, ஸ்டோர் ஒன்றில் இரு தினங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஸ்டோர் உரிமையாளரிடம் ஆண்டுக்கு ரூ.5,000 கொடுத்தால், ஓராண்டுக்கு எந்த ஆய்வும் செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர். ஆவணங்கள் முறையாக இருப்பதால்,ஸ்டோர் உரிமையாளர் பணம் தர மறுத்துவிட்டார். மறுநாள் மதியம் ஸ்டோருக்கு அதே அலுவலர்கள் ஆய்வுக்கு வந்தபோது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்துள்ளது. அதற்கு ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர்.குப்பையில் வீச ஒதுக்கிவைத்திருந்த, அழுகிய தக்காளிகளை பார்த்து, தரமற்ற பொருட்கள் விற்பனை செய்கிறாயா என்று மிரட்டியுள்ளனர். விதிமீறல் இருந்தால்அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறோம். அதேசமயம், மிரட்டி அட்டூழியம் செய்வது வேதனைக்குரியது.இவ்வாறு, அவர் கூறினார்.'புகார் அளிக்கலாம்'உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மிரட்டி, பணம் கேட்பதாக வியாபாரிகள் எழுத்து பூர்வமாக, புகார் அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.-அனுராதாமாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்

தீக்குளிப்பேன்!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் உதவியாளரிடம், மொபைல் போனில் பேசும்(ஆடியோ பதிவு) கடை வியாபாரி ஒருவர், 'நாங்கள் தொழில் சரியாகத்தான் செய்கிறோம். தரமற்ற பொருளை விற்கவில்லை. லைசென்ஸ் இருக்கிறது. பிறகு ரூ.5,000 எப்படி தரமுடியும். இப்படியே நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் கடை முன் தீ குளிப்பேன்' என்கிறார். மறுமுனையில் பேசிய உதவியாளரோ, 'சாரிடம் பேசுங்கள்' எனக்கூறி அழைப்பை துண்டிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி