வாழ வைக்குது வாழை; விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்; நேந்திரன், கதளி வாழைக்காய் மற்றும் வாழைத்தார்களின் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேட்டுப்பாளையம் - அன்னுார் சாலை, நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். கடந்த ஞாயிறன்று நடந்த ஏலத்துக்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னுார், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து, 2,000 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மண்டியில் நடந்த ஏலத்தில், நேந்திரன் ஒரு கிலோ குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகபட்சம், 42 ரூபாய்க்கும், கதளி குறைந்தபட்சம், 30க்கும் அதிகபட்சம், 70 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம், 250க்கும், அதிகபட்சம், 700 ரூபாய்க்கும், ரஸ்தாலி, 250, அதிகபட்சம், 900க்கும், தேன் வாழை, 250, அதிகபட்சம், 1,000க்கும், செவ்வாழை குறைந்தபட்சம், 250, அதிகபட்சம், 1,100 ரூபாய்க்கும், மொந்தன், 150 அதிகபட்சம், 450க்கும், பச்சை நாடன், 200க்கும், அதிகபட்சம், 500 ரூபாய்க்கும், ரோபஸ்டா, 200க்கும், அதிகபட்சம், 600 ரூபாய்க்கும் ஏலம் போனது. வாழைத் தார்களின் வரத்து குறைவாக இருந்ததால், நேந்திரன், கதளி ஒரு கிலோ வாழைக்காய், 5 ரூபாய் வரையும், மற்ற ஒரு வாழைத்தார், 50 முதல் 100 ரூபாய் வரை விலை உயர்வாக ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், ஆகஸ்ட் மாதம், முதல் வாரம் வாழைத்தார்கள் அறுவடை சீசன் துவங்கும். அதுவரை வாழைத்தார்களின் விலை உயர்வாக இருக்கும் என, ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.