| ADDED : ஜன 19, 2024 04:37 AM
கோவை : கோவை சிங்காநல்லுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 40. இவர் இந்து மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது மொபைல் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மற்றொரு மொபைலில் இருந்து அழைப்பு வந்தது. அதில் ஒரு நபர் இந்தியில் பேசினார். சுப்பிரமணியம் அவரிடம் ஆங்கிலத்தில் பேசி விபரங்களை கேட்டார். அப்போது அந்த நபர் தான் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், மும்பையில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியம், அருகில் இருந்த தனது நண்பர் செந்தில்குமாரிடம் மொபைல் போனை கொடுத்து, அந்த நபரிடம் தெளிவாக ஆங்கிலத்தில் பேசி விபரங்களை கேட்க கூறினார்.மீண்டும் அந்த நபர் செந்தில்குமாரிடம் மும்பையில் குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து சுப்பிரமணியம் மற்றும் அரவது நண்பர் கோவை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகர போலீசார் உடனே மும்பை போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமாரை அழைத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து அந்த மர்ம நபர் பேசிய மொபைல் எண்ணை பெற்றனர். அந்த மொபைல் எண் யாருடையது, எங்கிருந்து அழைப்பு வந்தது என ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த எண் இணைய தளம் மூலம் வந்த அழைப்பு என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.