கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
பெ.நா.பாளையம்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மின் பயன்பாட்டு கருவிகளை கவனமுடன் கையாள மின் வாரியத்தினர், பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்கக் கூடாது. வீட்டில் மின் சுவிட்சுகளை ஆன் செய்யும்போது, கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால், மின்சார சுற்றுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால், பயன்படுத்தக் கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லை என்றால் அருகில் இருந்து தாங்களாக ஒயர் வாயிலாக மின்சாரம் எடுக்க முயற்சிக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் ட்ரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்க வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும் மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ, கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் சேதமடைந்து இருந்தாலோ, சாய்ந்து இருந்தாலோ உடனடியாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என, மின்வாரியத்தினார் கூறினர்.