உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு சங்கம் சேவை குறைபாடு; 41 லட்சம் ரூபாய் திருப்பித்தர உத்தரவு

கூட்டுறவு சங்கம் சேவை குறைபாடு; 41 லட்சம் ரூபாய் திருப்பித்தர உத்தரவு

கோவை : கூட்டுறவு சங்கம் சேவை குறைபாடு செய்தததால், வாடிக்கையாளர் வைப்பீடு செய்த தொகை 41 லட்சம் ரூபாயை, வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கொடுக்க உத்தரவிடப்பட்டது. கோவை,கே.கே.புதுார், ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் சண்முகவடிவு. வேலாண்டிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில், 2022 ஜன., 31ல், 41 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீடு செய்தார். வீடு கட்டுவதற்காக, டெபாசிட் செய்த பணத்தை, முதிர்வு தேதி முடிந்தவுடன் திரும்ப பெறுவதற்கு, கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார். ஆனால், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. சண்முகவடிவிடம் கேட்காமல், வைப்பீட்டு தொகையை, கூட்டுறவு கடன் சங்கம் தன்னிச்சையாக மேலும் சில ஆண்டுகளுக்கு புதுப்பித்தது தெரிய வந்தது. பணத்தை திரும்ப தரக்கோரி, கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய ஊழியர், பணத்தை கையாடல் செய்து விட்டதால், பணத்தை மீட்டு திரும்ப தருவதாக தெரிவித்தனர். சண்முகவடிவு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் வைப்பீடு செய்த தொகை, 41 லட்சம் ரூபாயை, 5.5 சதவீத வட்டி சேர்த்து திரும்ப கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ