தினமலர் பட்டம் வினாடி -- -வினா போட்டி: திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
மேட்டுப்பாளையம்: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்- பரிசை வெல்' வினாடி -வினா போட்டியில், மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரமடை டி.ஆர்.ஜி., மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' சார்பில் வினாடி -வினா போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கு மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பள்ளி அளவிலான சுற்றில், வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 85 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'அ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியில் இடம் பெற்ற, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஜெய் அபினவ் மற்றும் இஷாந்த் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் சுலோச்சனா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடன், புவியியல் ஆசிரியர் சாந்தி, தமிழ் ஆசிரியர் சாந்தி ஆகியோர் இருந்தனர். டி.ஆர்.ஜி., மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி காரமடை புஜங்கனூர் அருகே, டி.ஆர்.ஜி., மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'அ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியில் இடம்பெற்ற எட்டாம் வகுப்பு மாணவர் ராம் சரண் மற்றும் மாணவி ரித்திகா ஸ்ரீ ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் மீனாட்சி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடன் ஆசிரியர்கள் தினேஷ்குமார், சுஜிதா, ஹேமப்பிரியா, ஆகியோர் இருந்தனர். இப்போட்டிக்கு, எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் டைட்டில் ஸ்பான்சராகவும், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள், கிப்ட் பார்ட்னர்களாகவும் இணைந்துள்ளனர்.