காலில் காயமடைந்த யானை நடக்க முடியாமல் தவிப்பு
வால்பாறை:வால்பாறை அருகே, அதிரப்பள்ளி ரோட்டில் காலில் காயமடைந்த யானை சிகிச்சைக்கு பின்னும் நடக்க முடியாமல் அவதிப்படும் நிலையில், அதற்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் கடந்த மாதம், 19ம் தேதி காலடி தோட்டப்பகுதியில், 15 வயதுடைய ஆண் யானைக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், நடந்து செல்வதை வனத்துறையினர் கண்காணித்தனர். இதனையடுத்து காயம்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பின் வாளச்சால் டி.எப்.ஓ., சுரேஷ்பாபு தலைமையில், எர்ணாகுளம் உதவி வன கால்நடை மருத்துவர் பினோய், தலைமையிலான வனத்துறையினர், காலில் காயம்பட்ட யானைக்கு மருந்து தடவி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிகிச்சை அளித்த யானை தற்போது, நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நிற்பதும், படுப்பதுமாக உள்ளது. இதனையடுத்து, வனத்துறையினர் மீண்டும் காலில் காயம்பட்ட யானைக்கு சிகிச்சைக்கு அளிக்கும் வகையில், யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த எட்டு மாதங்களுக்கு முன், அதிரப்பள்ளி வனப்பகுதியில் தலையில் காயம் ஏற்பட்ட யானைக்கு, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த பின் காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின் அந்த யானை கோடநாடு யானை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த யானை சில நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அதிரப்பள்ளி காலில் காயம்பட்ட யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாக யானைக்கு உணவு வாயிலாக மருந்து வழங்கப்படும். உடல் நலம் தேறிய பின், யானைக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.