முன்னாள் சாதனை மாணவர்கள் பற்றி இந்நாள் மாணவர்களிடம் விளக்கணும்
கோவை; கோவை அரசு மாதிரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், அப்பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு, உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினர். இக்கூட்டம், மாதிரி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. அதில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, கல்விசார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. ரூ.4 கோடியில் புதிய வகுப்பறை, தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம், தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாதிரி பள்ளிகளில், மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் திறமைமிக்க மாணவர்கள் தேர்வின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்க சிறந்த வாய்ப்புகளை, இந்த மாதிரி பள்ளிகள் உருவாக்குகின்றன. மாணவர்களை, அவர்களின் எதிர்காலத்துக்கு தயாராக்கி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழி நடத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம். தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளிகளில் சிறப்பாக கல்வி பயிலும் மாணவர்களை கண்டறிந்து மாதிரி பள்ளிகளில் சேர்க்க உதவ வேண்டும். இங்கே படித்து, முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த முன்னாள் மாணவர்களின் சாதனைகளை, தங்களது மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு, கமிஷனர் கூறினார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாதிரி பள்ளி தலைமையாசிரியர் பரிமளா தேவி, தற்போது முன்னணி கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயிலும், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எட்டு பேர் பங்கேற்றனர்.