பண்ணை வீட்டு மனை விற்று மோசடி; போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கோவை; பண்ணை வீட்டு மனை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக, ரியல் எஸ்டேட் அதிபர் மீது, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது.கோவை அடுத்த பேரூர் அருகே, 33 ஏக்கரில் தனியார் பண்ணை வீட்டுமனை உள்ளது. இந்த வீட்டுமனையை வாங்கியவர்கள், 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரில் கூறியிருப்பதாவது:-பேரூரில், 2012ம் ஆண்டில் பண்ணை வீட்டுமனை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள், 90 பேர் தலா 27 சென்ட் அளவிலான ஒரு பண்ணை வீட்டுமனையை, தலா ரூ.40 லட்சத்துக்கு வாங்கினோம்.அப்போது வழக்குகள், பிரச்னைகள் உள்ளதா என்று கேட்டபோது, ரியல் எஸ்டேட் நிர்வாகத்தினர் எவ்வித வழக்கு, வில்லங்கம் இல்லை என தெரிவித்தனர். இதை நம்பி வீட்டுமனையை வாங்கினோம்.இந்நிலையில், நிலத்தை எங்களிடம் விற்ற ரியல் எஸ்டேட் அதிபர் மீது, வேறொருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இருவருக்கும் பண பிரச்னை உள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களுக்கு முன், எங்களது வீட்டுமனை ஏலத்தில் விடப் போவதாக, நீதிமன்றத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.எனவே வீட்டுமனையை வாங்கிய நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.