உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முப்பெரும் தேவியரை கொலு வைத்து வழிபட்டால் எல்லா நன்மையும் வரும்!

முப்பெரும் தேவியரை கொலு வைத்து வழிபட்டால் எல்லா நன்மையும் வரும்!

தினமலர் மற்றும் அதிசியா பிராப்பர்ட்டி சார்பில், நவராத்திரி பொம்மை கொலு விசிட், சுந்தராபுரம், போத்தனுார் மற்றும் மதுக்கரை பகுதியில், நேற்று நடந்தது. கொலு வைத்துள்ள, 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, 'தினமலர்' குழுவினர் விசிட் செய்தனர்.ஒவ்வொரு கொலுவும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன. வீடுகள் கோவில்களாக மிளிர்கின்றன.

'வீடே தெய்வீகமாகிறது!'

போத்தனுார் டீச்சர்ஸ் காலனி முத்தையா நகரில் வசிக்கும், நமது வாசகி பத்மா வெங்கட சுப்ரமணியம் கூறுகையில், ''பிற பண்டிகைகளை போல் அல்லாமல், நவராத்திரியை மட்டும்தான் ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறோம். இந்நாட்களில் வீடு தெய்வீகமாக இருப்பதை உணர முடிகிறது,'' என்றார்.

'வீடு சுபிட்சமாகிறது!'

போத்தனுார் சத்தியநாராயணா நகரில் வசிக்கும் வாசகி லட்சுமி சுரேஷ் கூறுகையில், ''வீட்டில் தினமும் சாமி கும்பிடுகிறோம், கோவிலுக்கும் போகிறோம். ஆனால் அதில் இல்லாத மகிழ்ச்சியும், மன அமைதியும் கொலு வைக்கும் போது கிடைக்கிறது. வீடு சுபிட்சமாக இருக்கிறது,'' என்றார்.

'நவராத்திரியன்று பிறப்பு'

வெள்ளலுார் மகாலிங்கபுரத்தில் வசிக்கும் வாசகி வித்யா கார்த்திக் கூறுகையில், ''பல வருடங்களாக எங்கள் வீட்டில் அம்மா கொலு வைப்பார்கள். எனக்கு கல்யாணம் ஆன பிறகு நவராத்திரியன்று குழந்தை பிறந்தது. அதனால் மகளுக்காக நானும் கொலு வைத்து வருகிறேன்,'' என்றார்.

'தினமும் பிரார்த்தனை'

போத்தனுார் அண்ணாபுரம் ஐஸ்வர்யா நகரில் குடியிருக்கும், நமது வாசகி கிருத்திகா வெங்கடேஸ்வரன் கூறுகையில், ''குழந்தைகளுக்கு படிப்பு, தன்னம்பிக்கை மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் வரவேண்டும் என, தினமும் கொலுவில் பிரார்த்தனை செய்து வருகிறேன்,'' என்றார்.

'செல்வங்கள் வந்தடையும்'

போத்தனுார் செட்டிபாளையம் ஸ்ரீராம்நகரில் வசிக்கும் வாசகி லலிதா ராஜன் கூறுகையில், '' நவராத்திரி கொலு வைத்து அம்பாளை வழிபட்டால், 16 செல்வங்கள் நம்மை வந்தடையும் என்பது ஐதீகம். அதனால் தவறாமல் கொலு வைத்து வருகிறேன்,'' என்றார்.

'மனம் நிம்மதியாகிறது'

செட்டிபாளையத்தில் வசித்து வரும் வாசகி லட்சுமி சுலக்ஷ்சனா கூறுகையில், ''கொலு வைத்தால் மனம் நிம்மதியாக இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு வந்து போவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.

'குடும்பத்துக்கு சந்தோஷம்'

குறிச்சி கல்லுக்குழி வீதியில் வசிக்கும் நம் வாசகி வடிவு கூறுகையில், ''நவராத்திரி கொலு வைத்தால், குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது; அது போதும்,'' என்றார்.

'மனநிறைவு கிடைக்கிறது'

குறிச்சி பகுதியில் வசிக்கும் நம் வாசகி சித்ரா வைத்தியநாதன் கூறுகையில், ''கொலுவில் குறிப்பாக எதையும் வேண்டிக் கொள்வதில்லை. கொலு வைத்த ஒன்பது நாட்களும் வீட்டில் மகிழ்ச்சியும், மனநிறைவும் இருக்கிறது; அது போதும்,'' என்றார்.

'நன்மை உண்டாகும்'

க.க.சாவடியில் வசிக்கும் நம் வாசகர் மோகன்குமார், பிரமாண்டமான கொலு வைத்து பூஜை செய்து வருகிறார். அவர் கூறுகையில், ''நவராத்திரி முப்பெரும் தேவியரை கொலு வைத்து வழிபட்டால், நன்மை உண்டாகும். அதனால் ஆண்டுதோறும் விடாமல் சிறப்பாக செய்து வருகிறேன்,'' என்றார்.தினமலர் நாளிதழ் நடத்திய நவராத்திரி கொலு விசிட், நேற்றோடு நிறைவு பெற்றது.இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்கியதிசென்னை சில்க்ஸ், மேளம், கண்ணன் காபி, மெடிமிக்ஸ், ஐயப்பா நெய் மற்றும் கோபுரம் மஞ்சள் துாள் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றிகள். அதே போல், நமது குழுவினருக்கு பூரண ஒத்துழைப்பு அளித்த, நம் வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றிகள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை