மேட்டுப்பாளையம்:ஓட்டு எண்ணிக்கை நாளன்று, மாவோயிஸ்ட்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல்
இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கேரள மாநில வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் ஊடுருவாமல் இருக்க, கேரளா மாநில எல்லைப்பகுதிகளான ஆனைக்கட்டி, மாங்கரை, முள்ளி, கோபனாரி, நடுபுணி, வடக்கு காடு, ஜமீன்காளியாபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டனூர், வாளையார் உள்ளிட்ட சோதனை சாவடிகளில், போலீசார் தீவிர தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கை
ஜூன் 4ம் தேதி, லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று மாவோயிஸ்ட்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கேரள மாநில எல்லை, முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் வனப்பகுதியில் பதுங்கியுள்ளனரா என, தீவிரமாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோம்பிங் ஆபரேஷன்
போலீசார் கூறுகையில், 'முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள அத்திக்கடவு, பில்லுார், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் தேவைக்கு ஏற்ப ஆயுதப்படை போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடர் வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு படையினர், எஸ்.டி.எப்., போலீசார் அடிக்கடி, 'கோம்பிங் ஆபரேஷன்' நடத்தி வருகின்றனர்' என்றனர்.தீவிர கண்காணிப்புதமிழக -- கேரள எல்லை கிராமங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கிடையாது. இருப்பினும் கேரளா வனப்பகுதிகளில் இருந்து, கோவைக்குள் நுழையாமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மலை கிராமங்களில் பழங்குடியினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் நுழையாமல் இருக்க, தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அப்படியே தொடர்கின்றன. ஓட்டு எண்ணிக்கை நாளன்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், இரு மாநில போலீசாரை, தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்.- சரவணசுந்தர், டி.ஐ.ஜி., கோவை