பத்திரப்பதிவில் போலி எண் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
கோவை : தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின், கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.பத்திர எழுத்தர் கூலி உயர்த்தி வழங்குதல், பத்திர எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை உடனடியாக நடத்துதல், பத்திர எழுத்தர் இயற்கை மரணமடைந்தால் இறப்பு நிதி, 20,000 ரூபாயாக இருப்பதை, 5,00,000 அளவுக்கு உயர்த்தி தருதல், பத்திரப்பதிவின் போது வக்கீல்களின் பெயரில், போலி பதிவு எண்களை உள்ளீடு செய்து போலி கையொப்பமிட்டு பதிவு செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளுதல், வில்லங்க சான்று அட்டவணை திருத்தங்களை சார்பதிவாளர் நிலையிலேயே, ஆன்லைனில் சரிசெய்து கொடுக்க வேண்டும், பத்திரபதிவின் போது, பத்திர எழுத்தரின் கைரேகை பதிவு பெறும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் உமாபதி, பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.