கனிமவள கொள்ளை நடந்த பகுதிகளில் தீவிரமாக நடக்கிறது சீரமைப்பு பணி
கோவை; கோவையில் கனிமவளக்கொள்ளை நடந்த, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில், நீர்வழிப்பாதைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.கோவையிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான நல்லூர் வயல், சாடிவயல், சித்திரைச்சாவடி, ஆலாந்துறை, கரடிமடை, தடாகம், ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான கனிமவள கொள்ளை நடந்தது. கோர்ட் தடை விதித்தது.கனிமவளங்கள் கொள்ளை போகாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் ஒன்பது கண்காணிப்புக்குழுக்களை நியமித்துள்ளது. இதில் தாசில்தார், கனிமவளத்துறையினர், வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர், போலீசார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இச்சூழலில், கனிமவளக்கொள்ளைக்கு ஆதாரமாக உள்ள வழித்தடங்கள் அனைத்திற்கும், தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை பேரூர் தாலுகாவில் சிற்றோடைகள், பள்ளவாரிகள் பல உள்ளன. அவற்றின் மீது சிமென்ட் குழாய்களை அமைத்து, மண்மேடு ஏற்படுத்தி லாரிகளில் எளிதாக கனிமவளம் கடத்தி சென்றுள்ளனர். இந்த மண்மேடுகளை, அப்புறப்படுத்தி வருகின்றனர் வருவாய்த்துறையினர். கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் கூறுகையில், ''கனிமவளக்கொள்ளையை தடுப்பதற்காக, அமைக்கப்பட்டுள்ள ஒன்பது குழுக்களும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கிராமநிர்வாக அலுவலர்கள் ஒவ்வொருவரும், 24 மணி நேரமும் கவனமாக இருக்க அறிவுறுத்தியிருக்கிறோம்,'' என்றார்.
மின்கம்பங்களை மாற்ற வேண்டும்
கோவை வடக்கு கோட்டத்துக்குட்பட்ட மின்வாரியத்தினர், கனிமவளக்கொள்ளை நடந்த இடங்களில் உள்ள மின்கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும். இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. சில மின் கம்பங்கள் அந்தரத்தில் ஊசலாடும் நிலையிலுள்ளன. இவற்றை மாற்றியமைக்க வேண்டும்.