பாடம் நடத்துவதில் கவனமில்லை; தலைமையாசிரியர்கள் திணறல்
பொள்ளாச்சி; அரசியல் கட்சியினரின் சிபாரிசு காரணமாக, அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாத ஆசிரியர்களை கடிந்து கொள்ள முடிவதில்லை என, தலைமையாசியர்கள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை என மொத்தம், 437 பள்ளிகள் உள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம், 97 பள்ளிகளும் உள்ளன. இங்கு, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.ஆனால், பல பள்ளிகளில், ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகள் முறையாக கண்டறிய முடியாத நிலை உள்ளது. அதனால், மாணவர்கள் மீது அக்கறை கொண்ட தலைமையாசிரியர்கள் சிலர், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்கின்றனர்.மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். அவ்வப்போது, ஆசிரியர்களை கடிந்து கொள்ள முற்பட்டால், தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'சில ஆசிரியர்களிடம் முறையாக பாடம் நடத்த அறிவுறுத்தினால், அரசியல் கட்சியினரின் சிபாரிசை நாடிச் செல்கின்றனர். அதற்கேற்ப, துறை உயரதிகாரிகளும், அவர்களின் போக்கிற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.இதனால், சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் வாயிலாகவும் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன,' என்றனர்.