பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களால், கோலாகலமாக கொண்டாடப்படும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு நடப்பட்ட கம்பத்துக்கு பக்தர்கள் அபிேஷகம் செய்து வழிபட்டனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. திருவிழாவை அறிவிக்கும் வகையில், கடந்த, 13ம் தேதி, நோன்பு சாட்டப்பட்டது.இதையடுத்து, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த, 20ம் தேதி இரவு, கரியகாளியம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. அதன்பின், இரவு, 11:00 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது.இதில், மூன்று கிளைகள் உடைய மரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை சரியாக வடிவமைத்து, மஞ்சள் பூசி கோவில் தலைவாசலில் நடப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் முகக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி பகுதி பெண்கள், வீடுகளில் இருந்து குடங்களில் மஞ்சள் தண்ணீர் எடுத்து வந்து, நடப்பட்டிருந்த கம்பத்துக்கு அபிேஷகம் செய்து வழிபடுகின்றனர். வேப்பிலை வைத்தும், உப்பு கொட்டியும் வழிபாடு செய்தனர்.நேற்று இரவு, கரியகாளியம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு நடந்தது. நாளை, 23ம் தேதி கரியகாளியம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது.வரும், 27ம் தேதி, இரவு 9:00 மணிக்கு பூவோடு வைக்கப்படுகிறது. மார்ச் 1ம் தேதி வெளிப்பூவோடு துவங்குகிறது. அன்று இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.2ம் தேதி கோவிலில் திருவிழா கொடி கட்டப்படுகிறது. அன்று இரவு, மார்க்கெட் ரோட்டில் இருந்து பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தி, பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு நடக்கிறது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும், பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.வரும், 5ம் தேதி அம்மனுக்கு மகுடம் வைத்தல் நடக்கிறது. 6ம் தேதி காலை மாவிளக்கு வழிபாடு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று இரவு, முதல் நாள் தேர் கோவில் வளாகத்தில் இருந்து வடம் பிடிக்கப்படுகிறது. இதற்காக, விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும், அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேரும் தயார் செய்யப்படுகிறது.கோவில் வளாகத்தில் இருந்து வடம்பிடித்து, வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்ட தேர், வரும், 7ம் தேதி இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, சந்திரம் ரோடு தேர்நிலையம் பகுதியில் நிறுத்தப்படுகிறது.வரும், 8ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம் துவங்கி, கோவில் வளாகத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. அதன்பின், அம்மனுக்கு பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. 9ம் தேதி காலை மஞ்சள் நீராடல், இரவு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி இரவு மகா அபிேஷகம் நடக்கிறது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் நடைபாதை முழுவதும் தடுப்பு அமைத்து, வெயிலின் தாக்கம் இல்லாத வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. கோவில் வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. தேரோட்டத்தன்று, அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்து, பக்தர்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.