கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
கோவை: கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களில், பணிபுரியும் பணியாளர்கள் நலன் கருதி, கோவை மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம், கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை மையத்தில் நடந்தது. முகாமை, கோவை மண்டல இணைப்பதிவாளர் அழகிரி துவக்கி வைத்தார். கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவுத்துறை பணியாளர்களும், மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றனர். இதில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல், கண், இதயம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. தகுந்த மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், கோவை துணைப்பதிவாளர்கள் ராஜேந்திரன், விஜயகணேஷ், பொள்ளாச்சி பகுதி துணைப்பதிவாளர் சுவேதா, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.