வீரகேரளம் மயானத்தில் மருத்துவ கழிவு எரிப்பு
தொண்டாமுத்துார்; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, வீரகேரளத்தில் பொது மயானம் உள்ளது. சில நாட்களாக, மர்ம நபர்கள் சிலர், மாலை நேரங்களில் வந்து, மருத்துவக்கழிவுகள் மற்றும் ரசாயன பொருட்களை எரிக்கின்றனர். இரு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தீ எரிவதோடு, அப்பகுதி முழுவதும், கரும்புகையுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. தீவைத்து எரிக்கப்பட்ட இடங்களில், பாதி எரிந்த நிலையில், குளூக்கோஸ் பாட்டில்கள், மருத்துவ கையுறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மயானத்தில், சட்ட விரோதமாக மருத்துவ கழிவு கொட்டிய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.