மேட்டுப்பாளையம்: கடந்த வாரத்தை விட இந்த வாரம் நேந்திரன், கதளி வாழைக்காய் கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்து ஏலம் போனதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் -- அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடக்கிறது. தற்போது வாழைத்தார் அறுவடை சீசன் என்பதால், ஏல மண்டிக்கு, அதிகளவில் வாழைத்தார்கள், விற்பனைக்கு வருகின்றன. நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், பவானிசாகர், அன்னுார், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து, 3,500 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். மண்டியில் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன் அதிகபட்சம், 30 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 40 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரம் நேந்திரன் 35 ரூபாய்க்கும், கதளி 45 ரூபாய்க்கும் ஏலம் போனது. சபரிமலை சீசன் மற்றும் முகூர்த்தம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்த்த விவசாயிகள், கடந்த வாரத்தை விட, இந்த வாரம் கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை குறைந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். வாழைத்தார் ஏலம் போனதில், ஒரு பூவன் தார் அதிகபட்சம், 500 ரூபாய்க்கும், ரஸ்தாலி 700க்கும், தேன் வாழை 700க்கும், செவ்வாழை 850 ரூபாய்க்கும், மொந்தன் 450க்கும், ரோபஸ்டா 400க்கும், பச்சை நாடன் 500 ரூபாய்க்கும் ஏலம் போனது. இத்தகவலை வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் தெரிவித்தனர்.