| ADDED : ஜன 24, 2024 12:23 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், 127வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மரக்கன்று மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.நேதாஜியின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பேரவை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார்.செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கவிஞர் முருகானந்தம் வரவேற்றார்.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்கள், என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன், மா, பலா, கொய்யா, வேம்பு, நெல்லி, மகிழம்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மொத்தம், ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரவை நிர்வாகி முத்தமிழ் நன்றி கூறினார்.